இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் ரத்து


இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் ரத்து
x

இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். மந்தனா- பலாஷ் முச்சால் திருமணம் கடந்த நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்தது. இதற்காக தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. திருமணத்துக்கு முந்தைய முக்கிய சடங்கான மெஹந்தி விழாவும் நடைபெற்றது.

அந்த சூழலில் கிரிக்கெட் நட்சத்திரம் மந்தனாவின் திருமணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அவரது மேலாளர் துஹின் மிஷ்ரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். திருமணம் நடைபெற இருந்த 23-ந் தேதி அன்று மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார்.

அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே ஸ்மிருதியின் தந்தையைத் தொடர்ந்து, அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து அழுது கொண்டிருந்த பலாஷ்-க்கு திடீரென உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருக்கிறார் என கூறப்பட்டது.

இதனிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பாடகர் பலாஷ் முச்சால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர், அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் எனது திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த விஷயம் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, நாங்கள் முன்னேற எங்களுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன். அங்குதான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story