பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டி சாதனை

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாகவே அரசின் கருவூலத்துக்குத் தேவையான அதிக வரி வருவாய் கிடைக்கும்.
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி, முகூர்த்த நாள் என்பதால் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.






