தினந்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு கலைஞர் எழுதுகோல் விருது

தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை,
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு 2021 முதல் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 'கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருதினை“ 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் திரு.டி.இ.ஆர். சுகுமார் அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். அதனை தொடர்ந்து சென்னையில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு அச்சகப்பணியாளர் குடியிருப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் 96 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கலைஞரின் எழுதுகோல் விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ம் ஆண்டு வி.என்.சாமிக்கும், 2023-ம் ஆண்டு நக்கீரன் இரா.கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






