புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

யே புதுவை உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக புஸ்சி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி,
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன்படி புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி த.வெ.க. சார்பில் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை நடத்த போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கேட்டு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் இதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும்பட்சத்தில் இதுவரை போலீஸ் அனுமதி வழங்காததால் த.வெ.க.வினர் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையே புதுவை போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார் சிங்லாவை அவரது அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று சந்தித்து, விஜய்யின் மக்கள் சந்திப்பு அனுமதி தொடர்பாக பேசினார். ஆனால் ரோடு ஷோ நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் வரை நடந்தது. தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனையும் சந்தித்து பேசினார். இதற்கிடையே புதுவை உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக புஸ்சி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும். கரூர் துயர சம்பவத்தை காரணம் காட்டி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, புதுவை சபாநாயகர் செல்வம் கூறியதாவது- புதுச்சேரி சிறிய நகரம் தமிழகத்தை போன்று மிகப்பெரிய சாலைகள் இல்லை. ஆகவே விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது. வேண்மென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்தி கொள்ளலாம்’ என்று கூறினார்.






