பல தடைகளை தாண்டி அரசு டாக்டர் ஆன மாற்றுத்திறனாளி

2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. அவருக்கு வயது 23. ஆனால் இவர் 3 அடி உயரம் கொண்டவர், பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்தார். இவரின் உடலில் 72 சதவீத லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இவர் குள்ளமாக இருப்பதால் பள்ளி படிப்பில் சக மாணவர்களை போல் இவரால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் இவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். இருந்தும் அத்தனை ஏளனங்களையும் தாங்கிக் கொண்டார் கணேஷ். இவருடைய லட்சியமே மருத்துவராவது. இதனால் தனது கனவை நனவாக்க வெற்றிகரமாக படித்து முடித்திருந்தார். பின்னர் நீட் தேர்வு எழுதி அதிலும் வென்றார். ஆனால் இவருடைய உயரத்தை காரணமாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் எம்பிபிஎஸ் படிக்கத் தகுதியற்றவர் என கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கணேஷ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு 2 ஆண்டுகள் நடந்தும் கணேஷுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து கணேஷ் பாரையா உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
மாற்றுத்திறனாளியான கணேஷ் பரையா பல தடைகளை தாண்டி டாக்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். 2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் போராடி படிப்பை முடித்து இப்போது அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மருத்துவ உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.






