அண்ணாமலையார் கோவில் சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்துவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்
இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்போவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. பணம் படைத்தவர்களும், அதிகாரப் பலம் கொண்டவர்களும் எந்தவித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மட்டும் எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது?. அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக கோவில்களில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலாலும், கோவில் நிர்வாகக் குளறுபடிகளாலும், பக்தர்கள் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்?. ஒருவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் திராணியின்றி, கட்டண உயர்வு மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா அரசு?
ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இல்லையேல் அந்த அண்ணாமலையார் சாட்சியாக தமிழக பா.ஜனதா சார்பாக மிகப்பெரிய அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.